தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க தொழில் நிறுவனங்களை தூண்ட வேண்டும்: இந்திய வம்சாவளியினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பறை இசை மற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்பேசியதாவது: உலகின் 3-வதுபெரிய நாட்டுக்கு வந்திருக்கிறேன். கடந்த 1971-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி இங்கு வந்தார். தற்போது அவரது மகனான நான் தமிழக முதல்வராக இங்கு வந்துள்ளேன். இத்தனை இந்திய முகங்களை பார்க்கும்போது, இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ,லாஸ் ஏஞ்சல்ஸ், பால்டிமோர், பாஸ்டன், டல்லஸ், ஹூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லான்டா எனஅமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறீர்கள். பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களை சேர்ந்த இந்தியர்கள் இங்கு உள்ளீர்கள்.

இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் முக்கியமான ஜனநாயக நாடுகள். இரு நாடுகள் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்தியாவில் வர்த்தகம், அறிவியல், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. கேல்லப் நிறுவன கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அதேபோல, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள், அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் ஆகிய பட்டியலிலும் இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். அந்த அளவுக்கு இந்தியாவை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் வாழும் மக்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றாலும், உயர்கல்வி, வர்த்தகம், சிறப்பான உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியினர் மிக அதிக இடங்களை பெற்றுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உயர் பதவிகளில் உள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். 2,000 ஆண்டுகளுக்கு பிறகு, இருதரப்பு வர்த்தகம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. இவையெல்லாம் இரு நாடுகள் இடையிலான நட்பின் அடையாளங்கள்.

ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்திய - அமெரிக்க உறவு மிகமிக முக்கியமாக உள்ளது. இதுஇரு நாட்டு அரசுகளின் உறவாகமட்டுமின்றி, இரு நாட்டு மக்களின் நட்புறவாகவும் எப்போதும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் ஈர்ப்புக்கு உரியதாக தமிழகம் விளங்குகிறது.

தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளன. கடந்த3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. அவர்களை நேரில் அழைக்கவே நான் அமெரிக்கா வந்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இந்திய வம்சாவளியினர், தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும்.

நீங்கள் நாடுகள் கடந்து வந்திருந்தாலும், மிக மிக சிறப்பாக வளர்ந்திருக்கிறீர்கள். இதுதான் நம் இந்தியரின் பெருமை, இதுதான் அமெரிக்காவின் வளம். சிலர் விரும்பி வந்திருக்கலாம், சிலரை சூழ்நிலைகள் துரத்தியிருக்கலாம், சிலர் வசதியான சூழலில் இருந்து வந்திருக்கலாம், சிலர் வசதி குறைவினால்கூட வந்திருக்கலாம்.

ஆனால், இன்று எல்லோரும் உன்னதமான இடத்தை பிடித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் உங்களது உழைப்பு, அறிவு, திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சிதான்.

மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை, தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள் ஆகியவைதான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளன. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளைவிட இந்த ஐந்தும்தான் உங்களை வளர்த்திருக்கின்றன. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி, அனைவரின் வளர்ச்சிக்கும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். வேற்றுமை எண்ணம் துளியும் இல்லாமல் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழ வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, சான்பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE