போலீஸ் வழக்கு பதிவு செய்த நிலையிலும் பரந்தூர் விமான நிலைய போராட்டம் தீவிரம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது.இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதனைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் கிராம மக்கள் தலைமையில் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போராட்டம் நடைபெறும் ஏகனாபுரத்தில் முதல் கட்டமாக 152.95 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பொதுமக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுட்டனர். போலீஸார் இவர்களை தடுத்து கலைந்து போக செய்தனர். இந்தச் சாலை மறியல் தொடர்பாக 60 பெண்கள் உட்பட 125 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் பலரும் ஏகனாபுரம் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்தற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர்.

இது மக்கள் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுவதை தடுப்பதற்கான யுக்தி என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஏகனாபுரத்தில் செப். 3-ம் தேதி இது தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளனர்.

இது குறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் க.சுப்பிரமணியன் கூறும்போது, “செப். 3ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை எங்கள் பகுதிக்கு அழைத்து வந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE