திமுக கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை: வைகோ நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக கூட்டணியில் சிறு பிரச்சினை கூட வர வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னை, எழும்பூரில் உள்ளகட்சி தலைமையகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வைகோ பேசியதாவது: செப். 15-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் நிதி வழங்க வேண்டும் என தலைமையில் இருந்து கேட்கவில்லை. ஆனால் விளம்பரப் பணிகளையும் நிர்வாகிகளை அழைத்து வரும் பணிகளையும் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தை ஒழிக்க பாஜக உள்ளிட்ட பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால் அது பலனளிக்காது.

திமுக-வோடு இணைந்து தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா செல்லும் முன் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி வெற்றி பெற முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன். திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. மதிமுக-வுக்கு வளமான, ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. இங்கிருப்பவர்கள் உறுதியாக இருக்கின்றனர். கட்சி இன்னும் வலுப்பெறும்." இவ்வாறு வைகோ பேசினார். இக்கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE