சீமான் குறித்து யூடியூபில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் நாதக புகார்

By சி.கண்ணன்

சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த 25-ம் தேதி ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் - நாகை திருவள்ளுவன்’ என்ற தலைப்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பேட்டி எடுத்த நெறியாளரும், பேட்டி கொடுத்த நபரும், நாம் தமிழர் கட்சியை சார்ந்த நபர்கள், நாகை திருவள்ளுவனை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது போலவும், அதற்கான வாட்ஸ் அப் உரையாடல்கள் இருப்பதாகவும் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

உண்மையில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், போலியான உரையாடல்களை தயாரித்து காட்டி, நாதக கட்சி மீதும், சீமான் மீதும் பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு யூடியூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல், சில இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சில நபர்களும், ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களும் மற்றும் மேலும் பலரும் நாம் தமிழர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இது போன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர். இதுபோன்ற அவதூறு பரப்புவதால், இரு தரப்பினர் இடையே மோதலும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளும் ஏற்பட வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், பொய்யான அவதூறு செய்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான காணொலியை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும்,” என்று அதில் கூறப்படுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE