நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மோசடி வழக்கில் கைதான 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிதி நிறுவனத்தின் உரிமையாளரான தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று (ஆக.31) திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3 கிலோ தங்கம் மற்றும் அளவுக்கதிகமான வெள்ளி பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேவநாதன் யாதவை நேரடியாக, அவரது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவரது லாக்கர் உள்ளிட்டவற்றை திறந்து சோதனை மேற்கொண்டதாகவும், இந்த சோதனையில் 3 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி பொருட்கள், நிலம் தொடர்பான 15 ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE