எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கீழ ஈரால் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள ஆலையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று இன்று காலை புறப்பட்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்குச் சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டையன் (41) என்பவர் ஓட்டினார்.

இந்த லாரி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை வந்து, அங்கிருந்து தேசிய நான்கு வழிச்சாலையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலை முழுவதும் குளிர்பான பாட்டில்கள் சிதறின.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE