சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் சிறப்புரயிலாக அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவையை நிரந்தரமாக தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மீரட் – லக்னோ இடையே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆக.31) காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை - நாகர்கோவில் ரயில்புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் பின்னர், நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்தாம்பரம், விழுப்புரம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

16 பெட்டிகளைக் கொண்ட இந்தரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நாகர்கோவிலுக்கு ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,760-ம்,எக்ஸ்கியூடிவ் கோச்சில் ஒருவருக்கு ரூ.3,240 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை வந்தடையும்.

8 பெட்டிகளைக் கொண்ட இந்தரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர்,நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும். ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,575-ம், எக்ஸ்சிகியூடிவ் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.2,865-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வந்தேபாரத் ரயில்களை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர். இன்று மட்டும் சென்ட்ரலில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ரயில் புறப்படும். வழக்கமான சேவை செப்.2-ம் தேதி முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE