சென்னை: தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகவே,வெயில் தணிந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இது தவிர, முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி என சென்னை- திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்தது. மேலும், கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், திருவான்மியூர் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.