சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் - தமிழக அரசு நிர்வாக அனுமதி

By கி.கணேஷ்

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை ரூ.822.70 கோடியில் அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறை கடைகள் அமைந்தன.

சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ஆம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம், சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் (Multi Modal Facility Complex - MMFC) அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE