சென்னை: “வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கியவர்களுக்கு விற்பனை பத்திரம் தாமதமின்றி தரப்படுவதாகவும், 4 ஆண்டுகளாக கட்டி விற்பனையாகாமல் உள்ள வீடுகளை விற்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,” அமைச்சர் சு.முத்துசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஆக.30) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: “வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்களுக்கு விற்பனை பத்திரம் உடனடியாக வழங்குவதற்காக முகாம் நடத்தப்பட்டது.
இதன் மூலம் பல்லாயிரக்கணக்காவர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு விற்கப்படாமல் இருக்கும் வீடுகளை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்கள் குறித்தும் இன்றய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.