மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு; மாயமான மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

By கோ.கார்த்திக்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சென்னை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடலில் குளித்த நிலையில், கடல் அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், கடலில் மாயமான 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் பயிலும் 17 மாணவர்கள், மாமல்லபுரம் பகுதிக்கு இன்று (ஆக.30) சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றுபார்த்த அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரோஷன்(21) என்பவர் கடல் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(19), கவுதம்(19) ஆகியோர் கடலில் மாயமானார்கள். தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு மீட்பு படைவீரர்கள் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உள்ளூர் மீனவர்களின் துணையோடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் கடலில் மாயமானவர்களை தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வந்த மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி பலியானதாலும் இருவர் கடலில் மாயமானதாலும் உடன் வந்தவர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE