சென்னை: காஞ்சிபுரம் மதிமுகவில் புறநகர், மாநகர் மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக செயல்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கருணாகரன், காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகரச் செயலாளர்களுடன் இணைந்து தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் இன்று (வெள்ளிக்கிழமை) வைகோ விடுத்த அறிக்கையில், ‘காஞ்சிபுரம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட மதிமுக ஒன்றாக இணைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டமாக செயல்படும். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் என அனைத்தும் இதில் அடங்கும். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக ஜி.கருணாகரன் தொடர்ந்து செயல்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.