தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

குமுளி: கேரள எல்லையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக கேரள எல்லையான குமுளி, தேக்கடி மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சில நாட்கள் மழை பெய்வதும், அடுத்த சில நாட்கள் மழையின்றியும் காணப்படுவதால் அணைக்கான நீர் வரத்து சீரற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 221 கன அடியாக இருந்த நீர்வரத்து அடுத்தடுத்த நாட்களில் 282, 404, 405 கன அடியாக அதிகரித்தது. நேற்று (ஆக.29) தேக்கடியில் 28.4 மி.மீ மழை பதிவானது.

பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 41 மி.மீ. மழை பெய்தது. இதனால் இன்று (வெள்ளி) அணைக்கான நீர்வரத்து 913 கன அடியாக உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 130.05 அடியாக உள்ளது. விநாடிக்கு 400 கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவில் மழை பெய்வதற்கான வானிலைச் சூழல் அதிகரித்துள்ளது. இதனால் மழை மேலும் அதிகரித்து நீர்வரத்தும் மேலும் உயரும் நிலை உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE