உணவு பாதுகாப்பு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 391 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே 235 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 127 பேர்தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கட்டுபடுத்துவது போன்ற ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைமேலும் தீவிரப்படுத்த வேண்டும்என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உபரி உணவை வீணாக்காமல் தடுக்கும் திட்டம், ஒருமுறை உபயோகித்த எண்ணெய்யை மறுமுறைஉபயோகப்படுத்தக் கூடாது என்றவிழிப்புணர்வு, உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் சரியான தகவல்கள் இல்லையெனில் அவர்களின் மீது நடவடிக்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இத்துறையின் மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் உணவு பாதுகாப்புத் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

38 வழக்குகள் நீதிமன்றங்களில் இருப்பதால், 1,066 சுகாதார அலுவலர்கள் பணியிடங்களை நிரப்பும்பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகு, உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் வி.கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE