ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்: விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

By கி.கணேஷ்

சென்னை: சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஜூன் 21-ம் தேதி சட்டப்பேரவையில் சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய, நலவாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக் கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரியதுடன், மானியம் பெறுவதற்கான தகுதியையும் நிர்ணயித்து அரசுக்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதியுடையவராவார்.

மானியத்தைப் பெற, விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE