மதுரை: “தமிழக முதல்வர் சொன்னபடி 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வெற்றிபெற இப்போதிருந்தே கட்சி பணியாற்றுங்கள். விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்று வருங்கால தமிழகத்தை வழிநடத்த உள்ளார் உதயநிதி” என அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உற்சாகமாகப் பேசினார்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஆக.29) நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை வகித்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: “தமிழக முதல்வர் சந்திக்கும் தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
அதன்படி 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று திமுகவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.நம்மை நம்பித்தான் அவர் அவ்வாறு பேசினார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து பணியாற்றியது போல், சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற இப்போதே பணிகளை தொடங்க வேண்டும்.
கட்சி கொடிக் கம்பம் இல்லாத கிராமங்களில் கொடிக்கம்பங்களை நட்டு திமுக கொடியை பறக்கவிட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை எம்பி தேர்தலில் வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட தொகுதியில் 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுத்தந்து திருப்புமுனையை ஏற்படுத்தினோம். தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருந்து எம்பி தேர்தலில் 40 தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து வெற்றிபெறச் செய்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அதன் மூலம் வருங்கால தமிழகத்தை வழிநடத்தவுள்ளார்.
» சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? - மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின், செப்.9-ல் மதுரையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வருகை தருகிறார். இதுவரை இல்லாத வகையில் 11,500 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 2 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு, 500 சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்டவறை அவர் வழங்கவுள்ளார்.அவருக்கு வடக்கு மாவட்டம் சார்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்சியால் பிரம்மாண்ட வரவேற்பளிக்க தயாராவோம்,” என்று அவர் பேசினார்.