மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? - மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்துக்கு மத்திய அரசு கரோனா பரவலை காரணமாக கூறக் கூடாது. மதுரையில் எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-ல் அறிவித்தது. 2018-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவானது. 2019-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் விரைவில் கட்டுமானப் பணியை தொடங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை முடிக்க வேண்டும் என 2021-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமானப் பணியை முடிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று (ஆக.29) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில்,“கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் விடப்பபட்டுள்ளது. 2026-க்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்யாமல் மனுதாரர் மேலோட்டமாக வழக்கு தொடர்ந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டாகிறது. இந்த 5 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? எப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், “கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், “கரோனா பரவல் 2022-ல் முடிந்துவிட்டது. இன்னும் கரோனாவை காரணமாகச் சொல்லக் கூடாது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப்.24-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE