ஊழியர்களின் இறுதிச் சடங்குக்கான தொகையை தாமதமின்றி வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவு

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: மின்வாரிய ஊழியர்களின் இறுதிச் சடங்குக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மின் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் கே.பாலகிருஷ்ணன், மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கையில், “பணியில் இருக்கும்போது ஊழியர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் இறுதிச் சடங்குக்காக ரூ.25 ஆயிரம் முன்பணம் வழங்கப்படுகிறது. இது தொடர்பான கோரிக்கை கடிதத்துக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் ஓய்வூதியம் வழங்கும் நிதியத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உடனடி தேவை கருதி முன்பணம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மின் பகிர்மானக் கழகத்தின் நிதி வழங்கும் முறை பொதுமயமாக்கப்பட்டது. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இறுதிச் சடங்குக்கான தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. எனவே, அவசர தேவை கருதி இறுதிச் சடங்கு தொகையை அந்தந்த வட்டத்தின் தற்காலிக முன்பணத்தில் இருந்து வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE