தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்ப பெற மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்கராஜ் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.ஆர்.கணேசன் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர துப்புரவு பணி உட்பட இதர பணிகளை, தனியார்மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெறவேண்டும். அனைத்துப் பிரிவுதொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் அரசாணையை அமலாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப பஞ்சப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதியஉயர்வு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE