‘தடுமாறும் பல்கலை.கள்; முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்’ - ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: “தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வல்லுநர் குழு உதவியோடு சிறப்புத் திட்டம் வகுக்க வேண்டும். வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 536 ஆசிரியர் பணியிடங்களில் 350 இடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பெருமளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் எவரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 முதல் 6 ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருவதால், மொத்தமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 536&இல் இருந்து கிட்டத்தட்ட 200 ஆக குறைந்து விட்டது.

இரு துறைகளில் ஒரே ஒரு பேராசிரியர் கூட இல்லை என்பதால், பிற துறைகளின் பேராசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பேராசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 140&க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களால் நிலையான பேராசிரியர்களுக்கு இணையான தரத்துடன் கற்பிக்க முடியவில்லை என்று மாணவர்களும், கல்வியாளர்களும் கூறுவதாக தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும் தான் என்றில்லாமல், உயர்கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 13 பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பேராசிரியர்களின் எண்ணிக்கை ஓரளவு மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளது. மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கோவை பாரதியார், சேலம் பெரியார் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பல்கலைக்கழகங்களில் உத்தேசமாக 3500 பேராசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகத் தான் உள்ளன. இது பல்கலைக்கழகங்களின் கல்வி, ஆராய்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நிலையில், பல்கலைக்கழகங்கள் இல்லை என்பது தான் உண்மை. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் நிதி இல்லை என்ற மோசமான நிலை தான் நிலவுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஊதியம் தருவதற்கு கூட நிதியில்லை. அரசு நிதியுதவி செய்தால் மட்டுமே அந்தப் பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை பல ஆண்டுகளாக உள்ளது. மீதமுள்ளவற்றில் பெரும்பான்மையான பல்கலை.களில் ஏற்கனவே வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகைகளை எடுத்து தான் ஊதியம் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லை என்ற நிலை தான் நிலவும். அண்ணா பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களின் செலவை விட வருவாய் அதிகம் என்பதால், அப்பல்கலைக்கழகங்கள் மட்டும் தான் இன்னும் சில ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.

பல்கலைக்கழகங்களின் இந்த நிலைக்கு அரசு ஒரு காரணம் என்றால், பல்கலைக்கழகங்கள் இன்னொரு காரணம் ஆகும். பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு போதிய அளவில் ஒதுக்கீடு செய்யவில்லை. இன்னொருபுறம் பல்கலைக்கழகங்கள் அவற்றுக்கு தேவையான வருவாயை ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாகத் திகழ வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்; அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழகப் பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை.

மாறாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான அதிகாரம் மற்றும் அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக நிர்வாகங்களில் மாநில அரசால் தலையிட முடியாத நிலை காரணமாக பல்கலைக்கழகங்களின் செலவுகள் கடுமையாக அதிகரித்து விட்டன. இந்தக் குறைகள் அனைத்தையும் சரி செய்யாமல், பல்கலைக்கழகங்களை சீரமைப்பது என்பது பெருங்கனவாகவே இருக்கும்.

இப்போது தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதன் முதல் கட்டமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமான பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் வீண்செலவுகளை குறைப்பது, வருவாயை அதிகரிப்பது ஆகியவை குறித்தும், பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து வழங்குவதற்காக கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். குறித்த காலத்தில் வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்களை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளர.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE