குன்னூர் | வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவர் கைது

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: குன்னூரில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி வனக்கோட்டம்‌, குன்னூர்‌ வனச்சரகத்தில்‌ நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர்‌ கவுதம்‌ உத்தரவின்படி காட்டேரி வன சோதனைச்சாவடி பகுதியில்‌ குன்னூர்‌ வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத்‌ தலைமையில்‌ வனவர்‌ ராஜ்குமார்‌, வனக்காப்பாளர்‌ ராம்குமார்‌, வனக்காப்பாளர்‌ ஞானசேகர்‌, வனக்காவலர்‌ ஏசுராஜ்‌ ஆகியோர்‌ கூட்டுத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ‌ சென்ற வாகனத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். வாகனத்தில்‌, சுருக்கு வைக்க பயன்படுத்தப்படும்‌ 1 கம்பி, 3 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அதனால்‌, வாகனத்தை ஓட்டி வந்த ராமகிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்ததில்‌, கிளண்டேல்‌ லேபர்‌ லைனை சேர்ந்த ராஜன்‌ என்பவருடன்‌ வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதை ஒப்புக்கொண்டார்‌.

மேலும்‌, அவரிடம்‌ நடத்திய விசாரணையில்‌ நான்சச்‌ ஒட்டர் லைன்‌ பகுதியில்‌ உள்ள அவரது வீட்டில்‌ வெடிகுண்டு தயாரித்ததை ஒப்புக்கொண்டார்‌.எனவே, அவரது வீட்டை காவல்துறையினர்‌ மற்றும்‌ வருவாய்த்துறையினர்‌ முன்னிலையில்‌ சோதனை செய்ததில்‌ அங்கு நாட்டு வெட்டிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும்‌ பச்சை நூல்‌ சுற்றப்பட்ட அணுகுண்டு பட்டாசு, வெங்கச்சாங்கல்‌, கத்தி, தார்பாய்கள்‌ உள்ளிட்ட பொருட்கள்‌ கைப்பற்றப்பட்டன. மேலும்,‌ ராமகிருஷ்ணனின்‌ கூட்டாளியான ராஜன்‌ என்பவரும்‌ கைது செய்யப்பட்டார்‌.

இச்செயல் வனஉயிரின (பாதுகாப்பு) சட்டம்‌ 1972ம்‌ வருடம்‌ பிரிவு 2 (9)-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்‌. எனவே அவர்கள் மீது வன உயிரின வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE