தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் பார்வூட், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 3 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், தருமபுரி மாவட்டம் அரூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், மேல் பவானி, தேவாலா, கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE