சவுக்கு சங்கர் மீதான 2-வது குண்டர் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆக.9ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆக.12ம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனது மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில், பாலாஜி ஸ்ரீநிவாசன், கே.கவுதம் குமார் மற்றும் ஹர்ஷா திரிபாதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள், “சவுக்கு சங்கர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், எவ்வித காரணங்களும் இன்றி, இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. முதல்முறை பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மூன்று நாட்களில் மீண்டும் அந்தச் சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளை எதிர்த்து தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தில், அவரை ‘போதைப்பொருள் குற்றவாளி’ என்று குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வு செய்தியாளரான சவுக்கு சங்கர், எவ்வித அச்சமுமின்றி மாநில அரசான ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார்.

எனவே, சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை ஆகிவிடக் கூடாது என்று மாநில அரசு அஞ்சுகிறது. எனவே, அவர் மீது மோசடியான குற்றச்சாட்டுக்களை கூறி சிறையில் அடைக்க முயற்சிக்கிறது. சவுக்கு சங்கர் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை, எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE