தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக. 23) முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஆக. 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 6 செ.மீ., பந்தலூரில் 5 செ.மீ.,மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 4 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை, தேவாலா, கோவை மாவட்டம் சோலையாறில் தலா 3 செ.மீ., அரியலூர் மாவட்டம் செந்துறை, நீலகிரி மாவட்டம் மேல்பவானி, பில்லிமலை எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி,கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE