ராமேசுவரம் கடலோரப் பகுதியில் 2-வது நாளாக வீசிய சூறைக் காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சூறை காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இரண்டாவது நாளாக இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை ஆழம் குறைந்த கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளனர். வானிலை இயல்பு நிலைக்கு திரும்பினால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்லுவதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE