தமிழக மீனவர்கள் 35 பேருக்கு செப்.4 வரை காவலை நீட்டித்தது இலங்கை நீதிமன்றம்

By எஸ். முஹம்மது ராஃபி


ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 4 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8 அன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மீனவர்களுடன் தமிழக அரசு தரப்பில் மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை திரும்பப் பெற்று கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில், 35 பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமனே விமலரத்னா மீனவர்கள் 35 பேருக்கும், செப்.4-ம் தேதி வரை இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் வாரியாபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE