கனிமொழி குறித்து அவதூறு பேச்சு: அதிமுக பகுதிச் செயலாளர் கைது

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி காந்தி மார்க்கெட் அதிமுக பகுதிச் செயலாளர் சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ப.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தொண்டரணி அமைப்பாளர் ஏ.தினகரன் அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீசார் சுரேஷ் குப்தா மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மதியம் வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சுரேஷ் குப்தாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வழியில் அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE