‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பம்!’

By ச.கார்த்திகேயன்

சென்னை: மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண பணிகளிலும் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய அறிவியல் யுகம், ட்ரோன் யுகமாக மாறி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. திருமண விழாக்கள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களை படம் பிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள் இன்று, ராணுவம், வேளாண்மை, உள்ளாட்சி அமைப்பு, மருத்துவம், திரைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன. வரும் காலங்களில் ட்ரோன்கள் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தின் கேந்திராக சென்னையை மாற்றுவதற்கான பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலயைில் ட்ரோன்களை மாநகராட்சியின் பல்வேறு சேவைகளை கண்காணிக்கவும், மாநகராட்சியின் சேவைகளை மேம்படுத்தவும் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கடற்கரை கண்காணிப்பு, கால்வாய்கள் தூர் வாருதலை கண்காணித்தல், நிவாரண பணிகள், பேரிடர் காலங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மருந்துகளை கொண்டு செல்வது, மனிதர்களால் செல்ல முடியாத பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது, குப்பை கொட்டும் இடங்களை கண்காணிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மூலம் மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. அதற்காக ட்ரோன் இயக்குவோரை நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது,” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE