‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு: சிறப்பு வகுப்புகள் நடத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: மத்திய அரசின் பட்டியலின மக்களின் உண்டு உறைவிட பள்ளிக்கான நுழைவுத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சிரஸ்தா எனும் இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான குடியிருப்புக் கல்விக்கான திட்டத்தை (SHRESHTA) செயல்படுத்தி வருகிறது. பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உண்டு, உறைவிட கல்வியை வழங்கும் நோக்கில் சிரஸ்தா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இணையதளத்தில் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தொடர்ந்து இணையதளம் வழியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு (2024) ஆண்டில் 9ம் வகுப்புக்கு 10,201 பேரும், 11 வகுப்புக்கு 8,993 பேர் பதிவு செய்துள்ளனர். சிரஸ்தா தேர்வு தொடர்பான விபரங்கள் பட்டியலின மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அல்லது கல்வியறிவு பெற்றவர்களின் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறுகினறனர். இதனால் சிரஸ்தா திட்டத்துக்கான நுழைவுத் தேர்வை பெரியளவில் விளம்பரப்படுத்தி, தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க போதுமான கால அவகாசமும் வழங்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சிரஸ்தா நுழைவுத் தேர்வு தொடர்பாக பெரியளவில் விளம்பரம் செய்யவும், இலக்கு பகுதியில தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பொதுமான கால அவகாசம் வழங்கி தேர்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE