“தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் இரவு காவலர்கள் விரைவில் நியமனம்” - அன்பில் மகேஸ் தகவல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் இரவுக் காவலர்கள் விரைவில் நிரப்பப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு 11 ,12-ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கற்கும் திறன் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 3500-க்கு மேல் 6 வகுப்பறை கட்டிடங்களும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1000 கோடி மதிப்பில் 3500 வகுப்பறை கட்டிடங்கள் தேவைப்படும் இடங்களில் கட்டித் தரப்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் மற்றும் இரவு நேர பள்ளி மாணவர்களை பாதுகாக்க இரவு நேர காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

அரசு பள்ளிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க மாவட்ட முழுதும் கணக்கெடுத்து தேவையான இடங்களில் ஆசிரியர்களை நிரப்பப்படும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேலும் கூடுதலாக கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE