தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக. 19) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று பெரும்பாலான இடங்களிலும், 20, 21 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 20-ம் தேதிகோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூரில் 9 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செமீ, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, மதுரை மேட்டுப்பட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தருமபுரி மாவட்டம் ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சாத்தியார், பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

சூறாவளிக் காற்று: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE