பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்யாத பெண் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 23 வயது இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 12-ம் தேதி பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சூர்யா, புகாரை ஏற்காமல், இளம்பெண்ணை ஒரத்தநாடு அனைத்துமகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்து, அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல், அவரை அலைக்கழித்ததுடன், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், பணியில் அலட்சியமாக பாப்பாநாடு பெண் உதவி ஆய்வாளர் சூர்யா செயல்பட்டதை, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆசிஷ் ராவத் உறுதி செய்தார். இந்நிலையில், பெண் உதவி ஆய்வாளர் சூர்யாவை, தஞ்சாவூர் ஆயுதப் படைக்கு நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE