தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்/சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் தாயகம் திரும்பினர். கடந்த ஜூன் 30-ம் தேதி பாம்பனிலிருந்து ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் உட்பட 7 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். மேலும், நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 விசைப் படகுகளையும், அவற்றில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் மீதான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 8-ம்தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேரும் மீண்டும் இலங்கைகடல் பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனையின்அடிப்படையில் விடுதலை செய்தும், படகை நாட்டுடைமையாக்கியும் நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தஒரு விசைப்படகில் இருந்த 4 பேரில் 2 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம், அந்த படகின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது விசைப்படகில் இருந்த 5 பேரில் 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். விசைப்படகை ஓட்டி வந்த படகு உரிமையாளருக்கு அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட பாம்பனை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 13பேர் நேற்று முன்தினம் மாலைகொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE