“இந்திய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் வேண்டும்” - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “மருத்துவர்கள் அச்சமின்றி பணிபுரிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம், இந்திய அளவில் வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் அவசர சிகிச்சைகள், உயிர் காக்கும் மருத்துவ அறுவை சிகிச்சைகள் தடையின்றி நடந்தன.

மருத்துவர்களின் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இளமாறன், இந்திய மருத்துவ கழகத் தலைவர் டாக்டர் குமாரவேல், செயலாளர் அழக வெங்கடேசன், முன்னாள் தலைவர் மகாலிங்கம், மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் செல்வராணி மற்றும் 300 அரசு மருத்துவர்கள், 100 தனியார் மருத்துவமனைகள், 300 மருத்துவ மாணவர்கள், 300 பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் செந்தில், ‘‘தமிழகம் முழுவதும் 37 இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மொத்தம் 25 ஆயிரம் மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொலையான பெண் மருத்துவருக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் அச்சமின்றி பணிபுரிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இந்திய அளவில் வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவர்கள், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE