சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்தம்: சென்னை மாநகராட்சி சார்பில் ஆக.19 முதல் சிறப்பு முகாம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ஆக.19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளார். மாநகரம் முழுவதும் 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில விவரங்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாகவும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியவில்லை என்றும், இதன் அடிப்படையிலேயே, சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மற்றும் பல்வேறு நலதிட்டங்கள் வழங்கப்படுவதால், அதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அடையாள அட்டை திருத்த முகாமை மாநகராட்சி நடத்துகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “சென்னை மாநகராட்சியில்‌ கடந்த 2023-ம்‌ ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தம்‌ தேவைப்படுவோர்‌, திருத்திக்கொள்ள வரும் ஆக.19 முதல் 21-ம் தேதி வரை சிறப்பு முகாம் அனைத்து மாநகராட்சி மண்டல மற்றும் வட்டார அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இதில், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நகல்‌ எடுத்து, அதில்‌ எந்த திருத்தம்‌ தேவைப்படுகிறது என குறிப்பிட்டு, அதற்கான ஆதாரத்துடன்‌ கையொப்பமிட்டு, சிறப்பு முகாமில் முதுநிலை வருவாய்‌ அலுவலர்களிடம்‌ வழங்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE