கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: மெழுகுவர்த்தி ஏந்தி தமிழக பாஜக பெண் நிர்வாகிகள் மவுன அஞ்சலி

By துரை விஜயராஜ்

சென்னை: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பாஜக பெண் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை (ஆக.16) மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்தும் ஆக.16-ம் தேதி தமிழகம் முழுவதும் 66 இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதையடுத்து, மவுன ஊர்வலம் நடத்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

ஆனால், மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் செல்வதற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அந்தந்த மாவட்ட பாஜக அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் பயிற்சி மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னையில் கோடம்பாக்கம் அஜீஸ் நகரில் மாநில செயலாளர் பிரமிளா சம்பத் தலைமையில் பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நுங்கம்பாக்கத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், சென்னையில் 6 இடங்களில், அந்தந்த மாவட்ட தலைவர்கள், மகளிர் அணி மூத்த நிர்வாகிகள் தலைமையில், பாஜக பெண் நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE