முதல்வர் ஸ்டாலின் ஆக.27-ல் அமெரிக்கா பயணம் - 17 நாள் திட்டத்தின் முழு விவரம்

By கி.கணேஷ்

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், செப்.12-ம் தேதி வரை 17 நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார்.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதன் அடிப்படையில், பல்வேறு முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்லும் முதல்வர் அங்கு 17 நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 12-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். பயணத்தின் போது, சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழகத்துக்கு முதலீடு செய்யும் வகையில், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு நடத்த உள்ளார்.

உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்ட இந்தப் பயணத்தில், முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 28-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். அங்கு செப்டம்பர் 2-ம் தேதி வரை தங்கியிருந்து முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார். மேலும், ஆகஸ்ட் 28-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து, ஆகஸ்ட் 31-ம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன்பின், செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுகிறார். அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். இதற்கிடையில் செப்டம்பர் 7-ம் தேதி அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE