உதயநிதிக்கு எதிரான சனாதன வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கடந்தாண்டு செப்.2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் எனவும் கருத்து தெரி வித்திருந்தார். இதற்கு நாடு முழு வதும் எதிர்ப்பு வலுத்தது.

அமைச்சர் உதயநிதியின் இந்தகருத்துக்கு எதிராக உத்தரப்பிர தேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், பிஹார், கர்நாடகா என பல மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து, தமிழகத்தில் விசாரிக்க உத்தரவிடக்கோரி யும், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சஞ்ஜீவ்கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர்அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், “சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சனாதனம் தொடர்பான இந்த பேச்சுக்காகபல்வேறு மாநிலங்களில் வழக்குகளைப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வழக்குகளை ஒன்றாக தமிழகத்தில், சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் மற்ற மாநிலங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்” என கோரினர்.

ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கை தமிழகத்தில் விசாரிக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால் பெங்களூரு அல்லது தமிழகத்துக்கு வெளியே வேறு மாநிலத்துக்கு மாற்றலாம்” என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் உதயநிதிக்கு எதிராக புகார் அளித்தவர்கள் வரும் நவ.18-க்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்குஉதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகவேண்டியதில்லை என்று விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE