புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அனைத்து கட்சியினருடன் விரைவில் டெல்லி பயணம்: முதல்வர் ரங்கசாமி தகவல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டெல்லி செய்வதை எதிர்பார்க்கலாம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேநீர் விருந்தளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ. சவரணன்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள், எதிர்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள், பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “சட்டப்பேரவையில் நம்முடைய மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இப்போது அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒன்றிணைந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எந்தெந்த திட்டங்களையெல்லாம் கொண்டு வர வேண்டுமோ, அதையெல்லாம் கொண்டுவர வேண்டும். அதற்கு ஆளுநர் ஒத்துழைப்பு கொடுப்பார்.

மாநில அந்தஸ்து கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டெல்லி செய்வதை எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையே நம்பிக்கை தான். டெல்லிக்கு போகும்போது சொல்கிறேன்” இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE