தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை அமல்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை அமல்படுத்தப்பட்டதாக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 1.11 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நிலையாணை அடிப்படையில் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது கோட்டங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. எனவே, பொதுவான நிலையாணையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் தொடர்ச்சியாக 1995-ம் ஆண்டு பொதுவான நிலையாணை உருவாக்கப்பட்டது.

இதில் சில சரத்துகள் முரணாக இருந்ததால், அவற்றை திருத்தம் செய்யக் கோரி சிஐடியு சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், இறுதி செய்யப்பட்ட நிலையாணையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனாலும், 2 ஆண்டுகளாக நிலையாணை அமலுக்கு வரவில்லை. இந்நிலையில், பொதுவான நிலையாணை இம்மாதம் முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில், “அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான சான்றிடப்பட்ட நிலையாணை ஆக.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறும்போது, “இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், சட்டத்தை ஏமாற்றும் வகையில் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டுள்ளன. இந்த 2 ஆண்டுகளிலும் கோட்ட வாரியாக உள்ள நிலையாணை அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.டி.காமராஜ் கூறுகையில், “பழைய நிலையாணை அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனையை குறைந்தபட்சமாக மாற்றவோ, ரத்து செய்யவோ வேண்டும்,” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE