உதகையில் சூர்யா படத்தில் நடித்து வரும் 115 ரஷ்யர்கள் குறித்து போலீஸ் விசாரணை!

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: உதகையில் நடிகர் சூர்யா படத்தில் நடித்து வரும் ரஷ்ய நாட்டினர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதகையில் உள்ள தனியார் மாளிகையில் கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்துக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக ரஷ்யாவைச் சேர்ந்த 155 துணை நடிகர்கள் கடந்த 27-ம் தேதி சுற்றுலா விசாவை பெற்று வந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் உதகையில் உள்ள 3 தனியார் ஓட்டல்களில் தங்கிப் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் குறித்த விவரங்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்குக் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, படப்பிடிப்புக்காக வந்துள்ள 155 ரஷ்யர்களில் 42 பேர் ரஷ்யா திரும்பிச் சென்றனர். தற்போது 115 பேர் உதகையில் தங்கி உள்ளனர். ரஷ்யா நாட்டினர் சுற்றுலா விசாவில் வந்து திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்பதாலும் ரஷ்யா நாட்டினரின் விவரங்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முறையாகத் தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நீலகிரி மாவட்ட தனிப் பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், இது குறித்துத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE