சிபிசிஐடி ஐ.ஜி அன்பு உள்பட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் | சுதந்திர தினம்

By கி.கணேஷ்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஐடி ஐஜி-யான அன்பு உள்பட தமிழகத்தில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக உள்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கி.புனிதா, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு ஆய்வாளர் து.வினோத்குமார், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ச.சவுமியா, திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் நா.பார்வதி, திருப்பூர் சிபிசிஐடி ஆய்வாளர் பெ.ராதா, செங்கல்பட்டு காவல்துணை கண்காணிப்பாளர் செ.புகழேந்தி கணேஷ், ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் ஆய்வாளர் இரா.தெய்வராணி, வேலூர் மாவட்டம், பொன்னை காவல் நிலைய ஆய்வாளர் ஆ.அன்பரசி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நா.சுரேஷ் ஆகியோருக்கு சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

அதேபோல், பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சிபிசிஐடி ஐஜி-யான, தா.ச.அன்பு, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் இ.கார்த்திக், சேலம், தனிப்பிரிவு குற்றப்புலானய்வுப் பிரிவு துணை காவல் கண்காணி்ப்பாளர், சி.ர.பூபதிராஜன், சென்னை காவல் தொலை தொடர்புப் பிரிவு ஆய்வாளர் க.சீனிவாசன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் பு.வ.முபைதுல்லாஹ் ஆகியோருக்கு காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள், முதல்வர் மு.க.ஸ்டாலினால், பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE