வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இரும்புக் கம்பியால் அடித்து விரட்டிய இலங்கை மீனவர்கள்!

By கரு.முத்து

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த 6 நபர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்களின் படகில் ஏறி நான்கு பேரையும் வாள்களை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்புப் பைப்புகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். அத்துடன், படகில் இருந்த 700 கிலோ வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த நான்கு மீனவர்களும் இன்று மதியம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். அவர்களின் முதுகின் பின்புறத்தில் இரும்பு பைப்பால் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை தமிழ் மீனவர்களால் தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE