தொடக்க கல்வித் துறையில் பணியாளர் நிர்ணயம்: சரண் செய்த பணியிடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாளர் நிர்ணயத்தின்போது சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் பதிவு செய்யக்கூடாது என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்வழி மற்றும்ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை தனித்தனியாக கணக்கிட்டு வகுப்புவாரியாக பணி நிர்ணயம் செய்யவேண்டும். இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டபணியிடங்களை மீண்டும் கணக்கில் கொண்டுவரக்கூடாது.

மேலும், உபரி ஆசிரியர்கள், உபரி மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் என சரியாக கணக்கிட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கையில் ஏதும் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் தவறானதாக இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆசிரியர்களை பணி நிர்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE