கடலூர் அருகே அதிக ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் அதிக ஒலி எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடிகரும், இயக்குநருமான சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

கடலூர் - புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. மூன்று நிமிட இடைவெளியில் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதால், இந்தப் பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பிக் கொண்டு அதிவேகமாக மற்ற வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாகவே தினசரி பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்துக்கு முன்னால் நடிகரும் இயக்குநருமான சேரனின் கார் சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக்கொண்டே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேரன், நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பேருந்து ஓட்டுநரிடம் சென்று, “சாலையில் ஒதுங்குவதற்கு வழி இல்லாத நிலையில், இப்படி ஒலி எழுப்பக்கூடாது” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பதிலுக்கு அந்த ஓட்டுநரும் வாக்குவாதம் செய்தார். இதனால் வெறுத்துப் போன சேரன், “ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE