பிற்பட்ட பிரிவு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் முடித்துவைப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரிய வழக்கை, உச்ச நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நீதிபதி ஜனார்த்தனன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு சிறப்பு இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2007-ல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்த முறையான கணக்கீடு இல்லாமல் சிறப்பு இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டின் தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5.86 சதவீதம் இஸ்லாமியர்கள், 6.12 சதவீதம் கிறிஸ்தவர்கள். இவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. நீதித்துறை ஊழியர்களில் 10 சதவீதம் சிறுபான்மையினர்களாக உள்ளனர். இப்பணிகள் அனைத்தும் குரூப் 1, குரூப் 2 பணிகளாகும்.

சிறப்பு இடஒதுக்கீட்டுச் சட்டம், அரசியல் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்டது. முறையான மக்கள் தொகை கணக்கீடு எதுவும் இல்லாமல், சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல் இடஒதுக்கீடு வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல.எனவே, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவு இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2007-ஐ அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியாகௌரி அமர்வு இன்று (ஆக.13) விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், “இதே கோரிக்கையுடன் ஆந்திர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் அடிப்படையிலேயே, இந்த வழக்கிலும் தீர்வு கிடைக்கும். எனவே, வழக்கு முடிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE