நில மோசடி புகார்: திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் கைது

By கி.பார்த்திபன்

நாமக்கல்: 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக எழுந்த புகார் தொடர்பாக திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் கணவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்தி வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் (72) என்பவருக்குச் சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்களை தயார் செய்து கிரையம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடியாகும். இதில் 7,200 சதுர அடியை பொன்னுசாமி தனது கார் ஓட்டுநருக்கு விற்பனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, எட்டிக்கண் தனது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்த பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் பொன்னுசாமி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் திருப்பூரில் வைத்து பொன்னுசாமியை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை நாமக்கல் அழைத்து வந்த போலீஸார் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE