கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, வேலூர் மாவட்டம் காட்பாடியில் 14 செ.மீ., விழுப்புரத்தில் 13 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 12 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, பனப்பாக்கத்தில் 11 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், ஜம்புகுட்டப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக.13) முதல் 15-ம்தேதி வரை ஒருசில இடங்களிலும், 16, 17-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE