மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது: 16 கண் மதகை திறந்து உபரி நீர் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில், 2-வது முறையாக 120 அடியை எட்டி நிரம்பியது. நீர்வரத்து அதிகரித்ததால், 5 நாட்களுக்கு பின்னர் அணையின் 16 கண் மதகு மீண்டும் திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் இருந்து, காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 27-ம் தேதி 100 அடியை எட்டியது. 28-ம் தேதி நீர்வரத்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால், ஜூலை 30-ம்தேதி, மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் முதல்முறையாக 120 அடிநீர்மட்டத்தை எட்டி நிரம்பியது. அப்போது நீர்வரத்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக இருந்ததால், அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, கடந்த 31-ம் தேதி, அதிகபட்சமாக 1.70 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வந்தது.

எனவே, அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி வீதமும், 16 கண் மதகு வழியாக, விநாடிக்கு 1.48 லட்சம் கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த 7-ம் தேதி நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால், 16 கண் மதகு மூடப்பட்டு, உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

டெல்டா பாசனத்துக்கான நீர் வெளியேற்றம் அதிகமாகவும், நீர்வரத்து குறைவாகவும் இருந்ததால், 10 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் கடந்த 9-ம் தேதி119.59 அடியாக குறைந்தது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 120 அடியை எட்டி நிரம்பியது. இந்த ஆண்டில், ஜூலை 30-க்கு பின்னர் மீண்டும் 2-வது முறையாக, அணை நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 20,505 கனஅடியில் இருந்து நேற்று26,000 கனஅடியாக அதிகரித்தது.

எனவே, அணையில் இருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து, நேற்று 21,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்துவிநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. எனவே, 16 கண் மதகில் நீர் வெளியேற்றம் 13,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என்பதால், காவிரிகரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 11-ம் தேதி காலை 6 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

தொடர்ந்து அதிகரித்த நீர்வரத்து, நேற்று மாலை 5 மணிநிலவரப்படி 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE