புதுச்சேரி புதிய டிஜிபி ஷாலினி சிங் பதவியேற்பு: ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய டிஜிபி-யாக ஷாலினி சிங் இன்று (ஆக.12) பதவியேற்றார். இதையடுத்து ஆளுநர், முதல்வர் ஆகியோரை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி-யாக இருந்த ஸ்ரீனிவாஸ் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபி-யாக நியமிக்கபட்டார். இதையடுத்து நேற்று இரவு புதுச்சேரி வந்த அவர்,‌ இன்று போலீஸ் தலைமையகத்தில் டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக போலீஸ் தலைமையக அலுவலக வளாகத்தில் ஷாலினி சிங்கிற்கு, அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

டிஜிபி-யாக பொறுப்பேற்ற ஷாலினி சிங்க், ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனையும் சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE